கலசபாக்கம், மே 3: கலசபாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருமாமுடீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவத்தையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், தேன் உள்பட பல்வேறு வாசனை பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவமூர்த்திகள் விநாயகர், திருமாமுடீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி, சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திருமா முடீஸ்வரர் இளைஞர் பேரவையினர் செய்த தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதேபோல் கலசபாக்கம் அடுத்த மேல் வில்வராய நல்லூர் சுந்தராம்பாள் சமேத ஆவடி நாத ஈஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் உற்சவமூர்த்திகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.