Monday, June 17, 2024
Home » தி பர்னிங் சொல்யூஷன்

தி பர்னிங் சொல்யூஷன்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி மகிழ்ச்சியான வாழ்வுக்கு உடல் ஆரோக்கியமென்பது மிகவும் முக்கியமானது. நோயற்ற நல்வாழ்வுக்கு உடலைப் பேணிக் காப்பது அவசியம். வரும் முன் காப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு, வந்தப் பின் அதைச் சரி செய்வதுமாகும். உடலில் எந்த சின்ன பிரச்னையென்றாலும் ஆரம்பத்திலேயே சரி செய்தால் மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். உதாரணமாக, கவனிக்காமல் விடப்படும் சாதாரண அசிடிட்டியானது உயிர்கொல்லியாக மாறும் என்று கூறினால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ‘அசிடிட்டி’ எனப்படும் நெஞ்செரிச்சலுக்கு இயற்கையான முறையில் தீர்வினைப் பெறமுடியும். அசிடிட்டியை இயற்கையாகவே குணமாக்க உதவும் வகையில் ‘தி பர்னிங் சொல்யூஷன்’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார் ஹோலிஸ்டிக் ஊட்டச்சத்து நிபுணர் நிகில் சௌத்ரி. பத்தாண்டுகளுக்கு மேலாக உணவின் மூலம் நோய்களுக்கான தீர்வு அளித்து வரும் இவர் நெஞ்செரிச்சல் குறித்த புத்தகம் எழுத காரணம் பற்றி விவரித்தார்.‘‘பொதுவாக நாம் அனைவரும் சந்திக்கும் முதற்கட்ட பிரச்னை நெஞ்செரிச்சல். நேரம் தவறி உணவு சாப்பிட்டாலோ, எண்ணைப் பதார்த்த மற்றும் மசாலாக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது நாம் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்னை நெஞ்செரிச்சல் தான். சாப்பாடு சாப்பிட்டு  அதற்கு நாம் காணும் தீர்வு சோடா குடிப்பது அல்லது ஆன்லைனில் அந்த பிரச்னைக்கான தீர்வினை தேடி அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் டிப்சினை கடைப்பிடிப்பது அல்லது மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது. ஆனால் இவை எல்லாம் அந்த நேரத்திற்கு தீர்வு அளிக்குமே தவிர நிரந்தர தீர்வினை கொடுக்காது. மறுபடியும் இந்த பிரச்னை தலைத்தூக்கும். என்னிடம் வரும் நோயாளிகள் பலர் அசிடிட்டி பிரச்னைக்குக் காரணமாக சிகிச்சை பெற வருகிறார்கள். அவர்கள் அதனால் அவதிப்படுவதையும் பார்க்க முடிந்தது. மேலும் இந்த பிரச்னை உலகளாவிய பிரச்னை என்பதால் இது குறித்து முழுமையான புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடு தான் ‘தி பர்னிங் சொல்யூஷன்’’ என்றவர் புத்தகத்தில் உள்ள செய்தியினைப் பற்றி விவரித்தார். ‘‘இந்தப் புத்தகத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து ஒவ்வொரு விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறேன். ஒன்று அசிடிட்டி ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் உடனடி நிவாரணத்துக்கு என்ன செய்யலாம் என்பதையும், அந்த பிரச்னை தொடராமல் இருக்கவும், மருந்து மாத்திரைகளை தவிர்த்து நாம் விரும்பும் உணவினை சாப்பிடுவது.கடைசியாக உண்ணாவிரதம் குறித்து என ஐந்து படிநிலைகளையும் இந்த புத்தகத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன்.இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் ஆரோக்கிய வாழ்வானது உங்களுக்கு உறுதி’’ என்றவர் சாதாரண பிரச்னையாக தோன்றும் நெஞ்சு எரிச்சல் நாளடைவில் நம்முடைய உடலில் பெரிய பிரச்னைக்கான பாதையாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்“அசிடிட்டியை நாம் அனைவரும் சாதாரண பிரச்னையாகவே பார்க்கிறோம். ஆனால், இதை கவனிக்காமல் விட்டால் மிகப்பெரிய பாதிப்பினை உடலில் ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. அசிடிட்டிக்குமே நிறைய அறிகுறிகள் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், தலைவலி ஆகியவை கூட அசிடிட்டிக்கான அறிகுறிகளே. ஆனால், மக்கள் தலைவலிக்கும், பிபி-க்கும் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்களே தவிர அசிடிட்டியை கவனிக்க தவறுகிறார்கள். அசிடிட்டி குறித்து போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லையென்பதே உண்மை. நீண்ட காலமாக அசிடிட்டி உடலில் சிக்கலை ஏற்படுத்தி வந்தால் உணவுக் குழாயில் பெரிதளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த பிரச்னை காரணமாக உணவுக்குழாய் அழற்சி, அல்சர் போன்ற சிக்கல்கள் முதலில் ஏற்படும். அதன்பிறகு, அதிகப்படியான அமிலத்தன்மை உடலில் ஏற்படும் போது உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது தொண்டைக்கு கீழ் உள்ள உணவுக் குழாயில் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல, அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை ஒருவருக்கு மன அழுத்தம், எதிர்காலம் பற்றிய கவலை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். அசிடிட்டி ஏற்பட பல காரணங்கள் சொல்லலாம். உணவு முறை, தூக்கமின்மை, அதிக நேரம் வேலைப் பார்ப்பது, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கும் அசிடிட்டி மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். படிப்பு, வேலை அவசியம் தான். அதற்காக சரியான நேரத்தில் தூக்கத்தினை தவிர்த்தால் அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அசிடிட்டி கைட்லைன் தான் இந்த புத்தகம். துபாயில் வேலைப் பார்த்து வந்தவருக்கு எட்டு வருடமாக அசிடிட்டி பிரச்னை இருந்து வந்துள்ளது. எல்லா மருத்துவ முறைகளையும் முயற்சி செய்து பார்த்தவருக்கு எந்த மருத்துவமும் கைக்கொடுக்கவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கே வந்துவிட்டார். அவருக்கு உணவுப் பழக்கத்தில் இருந்து ஆரம்பித்து பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் கொடுத்தேன். இப்போது, அசிடிட்டி இல்லாமல் நிம்மதியாக இருக்கிறார். மீண்டும், துபாய்க்கே வேலைக்கு சென்றுவிட்டார்” என்றவர் இந்த புத்தகம் எழுத மூன்று வருடங்களானதாம்.‘‘உலகளவில் உள்ள என் பேஷன்ட்களில் 75% பேரின் பிரச்னை அசிடிட்டியாக உள்ளது. அவர்களை மனதில் கொண்டு தான் இந்த புத்தகம் எழுதினேன். மருத்துவ ரீதியான பிரச்னை என்றால், அதனை நாம் ரொம்ப கவனமாக எழுதணும், அதே சமயம் பாமர மக்களுக்கும் புரியும் படி இருக்கணும். அதனால் ஒவ்ெவாரு விஷயத்தையும் பல ஆய்வுகள் செய்து இதில் தொகுத்திருக்கேன். இதில் அசிடிட்டி என்றால் என்ன? அறிகுறிகள், ஏற்படும் பாதிப்புகள், தீர்வு, வாழ்க்கை முறை என அனைத்து குறித்தும் விரிவாக பேசி இருக்கிறேன். இந்தப் புத்தகம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. விரைவிலேயே, மற்ற பிராந்திய மொழிகளில் வெளியிட இருக்கிறேன்’’ என்றார் ஹோலிஸ்டிக் ஊட்டச்சத்து நிபுணர் நிகில் சௌத்ரி.தொகுப்பு: ஷம்ரிதி

You may also like

Leave a Comment

eleven + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi