திருவையாறு: திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் 14ம் ஆண்டு தியாகராஜர் ஆராதனை விழா இசைக்கல்லூரியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இசைக் கருவிகள் வழங்கப்பட்டது. திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் தஞ்சாவூர் பங்கஜம் ஏகேராஜு நாயுடு அறக்கட்டளை சார்பில் ஸத்குரு தியாகராஜ ஆராதனை 14ம் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் வித்யா வரவேற்றார், அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார், ஒய்வு பேராசிரியர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.அறக்கட்டளை நிறுவனர் தாஸ் துவக்கி வைத்து சென்னை, மதுரை, கோவை, திருவையாறு உள்ளிட்ட நான்கு அரசு இசைக் கல்லூரிகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இசைக் கருவிகள் வழங்கினார். சென்னை, கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர்கள் முனைவர் சாய்ராம், ஆண்டங்கோவில் முனைவர் சிவக்குமார் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி ஓய்வு பேராசிரியர் முனைவர் வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறினார்.