திருவெறும்பூர், ஜூன் 22: திருவனைக்கோவில் அருகே உள்ள உத்தமர்சீலி பகுதியில் கொள்ளிட ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கூறி மணல்லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூர் கொள்ளிட ஆற்றில் உத்தமர் சீலி எல்லைக்கு உட்பட்ட சருக்கை பகுதியில் இரண்டாவது மணல் விற்பனை நிலையம் அமைத்து மணல் விற்பனை செய்து வந்தனர்.
உத்தமர்சீலி கொள்ளிட ஆற்று பகுதியில் சட்ட விரோதமாக மணல் எடுத்து வருவதாகவும், இதனால் கனிம வளம் பாதிக்கப்படுவதாகவும், இந்த பகுதியில் நிலத்தடியில் நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், மேலும் கோடைகாலத்தில் போர்வெல் மோட்டார்கள் மூலம் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது கூறப்படுகிறது.
எனவே மணல் அள்ளுவதை கண்டித்து கிளிக்கூடு, திருப்பால்துறை, திருவளர்ச்சோலை, கொண்டையம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை உத்தமர்சீலி சருக்கை அருகே கொள்ளிட ஆற்றில் அமைந்துள்ள இரண்டாவது மணல் விற்பனை குவாரியில் இருந்து மணல் எடுத்து வரும் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களை சமரசம் பேசி அனுப்பி வைத்ததோடு மூண்டும் மணல் கொள்ளையை தொடர்ந்தனர். சம்பவ இடத்திற்கு நம்பர் 1 டோல்கேட் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.