திருவாடானை, பிப். 17: திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் ஊராட்சியிலுள்ள ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் ஊராட்சி பாரூர் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை கூடத்தில் போதிய இடவசதியின்றி நெருக்கடியான இடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் பாரூர் மற்றும் நற்கனியேந்தல் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கடை செயல்பட்டு வரும் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் அந்த ரேஷன் கடைக்கு நுகர்பொருட்கள் வாங்க வரும் மக்கள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே, பாரூர் வடக்கு குடியிருப்பு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த ரேஷன் கடை நீண்ட காலமாக அரசுப்பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை கூடத்தில் போதிய இட வசதியின்றி நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட நவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.