திருவாடானை. ஆக. 12: திருவாடானை அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாடானை அருகே மங்களக்குடி ஊமையுடையான் மடை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரியும், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.