திருவள்ளூர், மார்ச் 24: நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் அரசியல் கட்சியினர் தங்களது கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களை துணியால் மூட வேண்டும், பேனர்களை அகற்ற வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள குப்புசாமி நகர், சண்முக பத்மாவதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பாஜக கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் தேர்தல் நடத்தை விதி மீறலில் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பாஜக கொடி கம்பங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.