கோபால்பட்டி, நவ. 16: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி விழா கடந்த நவ.13 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். 7 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் 3ம் நாளான நேற்று மூலவருக்கும், உச்சவருக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்யும் திருக்காட்சி நடந்தது. தொடர்ந்து உபதேச கோலத்தில் எழுந்தருளிய சுவாமி கோயில் வளாகத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை சதாசிவ குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று கந்த சஷ்டி விழாவில் அருணகிரியாருக்கு நடனக் காட்சி அருளல் பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவ.18 சூரசம்காரம், மறுநாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும்.