திருமயம்,மார்ச் 12: திருமயம் ஊராட்சி சார்பில் நடைபெற்ற பொது ஏலத்தில் 110 பேர் கலந்து கொண்ட நிலையில் ரூ.4.57 லட்சத்திற்கு ஏலம் போனது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான திருமயம் ஊராட்சியின் தினசரி மகமை, கசாப்பு கடைகள், ஆடு அறுக்கும் தொட்டி, வணிக வளாகம் உள்ளிட்டவைகளுக்கு 2024-25 ஆண்டுக்கான பொது ஏலம் விடுவது தொடர்பாக முறையான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் ஊராட்சி மன்ற சமுதாயக் கூடத்தில் ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 110 பேர் முன் தொகை செலுத்தி ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சிக்கு சம்பந்தமான வணிக வளாகம் உள்ளிட்டவைகள் ரூ.4.57 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதே சமயம் ஏலம் சுமூகமாக நடைபெற உதவியாக இருந்த அனைவருக்கும் ஊராட்சி தலைவர் சிக்கந்தர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.