திருமங்கலம், ஜன. 8: திருமங்கலம் நகரிலிருந்து பல்வேறு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில், ஊர் அறிவிப்பு பலகைகளில் எழுத்துக்கள் சரிவர தெரியாமல் இருந்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவற்றை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. திருமங்கலத்திலிருந்து மதுரை நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காண்டை, போல்நாயக்கன்பட்டி, சேடபட்டி, சென்னம்பட்டி, மருதங்குடி, சோழவந்தான், உசிலம்பட்டி, வாகைகுளம், சொக்கநாதன்பட்டி, ராயபாளையம், காங்கேயநத்தம், காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் ரூட் போர்டு எனப்படும் சென்றடையும் ஊர்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டவை. இதனால் பல டவுன் பஸ்களில் பஸ் செல்லும் ஊர் பெயர்கள் சரிவர தெரியாமல் இயக்கப்பட்டு வந்தன. இதனால் கிராம மக்கள் அந்த பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இது சம்மந்தமாக பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளிலிடமிருந்து அரசு போக்குவரத்துக்கழக டெப்போவிற்கு பல்வேறு புகார்களை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பஸ்களின் டூட்நேம் போர்டுகள் எனப்படும் பெயர் பலகைகள் புதுப்பிக்கப்பட்டு பார்வைக்கு தெரியும்படி தடம் எண்ணுடன் புதியதாக எழுதி டவுன் பஸ்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன்படி புதுப்பிக்கப்பட்ட போர்டுகள் பளிச்சென தெரிவதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.