திருப்போரூர், ஜூலை 9: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கலேரி பகுதியில் வேம்புலி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 3.60 ஏக்கர் நிலப்பரப்பு 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், அதனை தனிநபர் ஆக்கிரமித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த அப்பகுதி வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கோயில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கைவைத்தனர். இதையேற்ற அதிகாரிகள், நேற்றுமுன்தினம் நிலங்களை அளவீடு செய்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறையினருடன் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி ஊராட்சிக்கு ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹.3 கோடியே 60 லட்சம் வரை இருக்கலாம் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.