திருப்புவனம்,மார்ச் 6: திருப்புவனம் அருகே உள்ள பிரமனூர்,பழையனூர் கண்மாய்களுக்கு செல்லும் கால்வாயின் தடுப்புச்சுவர் கடந்த அக்டோபர் மாதம் நீர் வரத்து அதிகமானதால் இடிந்து விழுந்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை என்பதால் பிரமனூர் மற்றும் பழையனூர் பகுதி விவசாயிகள் கவலையில் இருந்தனர். உடனடியாக தற்காலிகமாக மணல் மூட்டைகளால் அணை கட்டி பிரமனூர், பழையனூர் உட்பட 21 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் பணிகள் தாமதமானது. 100 மீட்டர் நீளத்திற்கு நிரந்தரமான தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் கூறுகையில், கடந்த ஆண்டு விரகனூர் மதகு அணையிலிருந்து மானாமதுரை வரை இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் பராமரிப்பு செய்வதற்காக ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 42 பணிகள் நடந்து முடிக்கப்பட்டன. பிரமனூர் கால்வாய் உடைந்த நிலையில் மணல் மூட்டைகளால் தற்காலிக அணைகட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து இல்லை என்பதால், நிரந்த தடுப்புசுவர் கட்டும்பணி துவங்கியது. 100மீ. நீளம் 4மீ.அகலத்தில் நிரந்தர தடுப்பு சுவர் சுமார் 1.5 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடந்து வருகிறது என்றார்.