திருமலை : திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலித்தனர்.திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வருடாந்திர பிரமோற்வம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 3ம் தேதி திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு பெறுகிறது.இதையொட்டி நேற்று கோயிலில் உள்ள சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகிய உற்சவ மூர்த்திகளை கோயில் கொடிமரம் அருகில் எழுந்தருளச் செய்தனர். பின்னர், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 8.10 மணிக்கு மீன லக்னத்தில் சிவனின் வாகனமான நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து, கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மன் தங்க பல்லக்கில் வலம் வந்தனர்.பிரமோற்சவத்தின் முதல் வாகன சேவையான அன்னப் பறவை வாகனத்தில் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கபிலேஸ்வர சுவாமி கொரோனா பரவல் காரணமாக வீதியில் உலா ரத்து செய்யப்பட்டதால் கோயிலுக்குள் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் இணை செயல் அதிகாரி வீரபிரம்மன், கோயில் துணை செயல் அதிகாரி சுப்பிரமணியம், உதவி செயல் அதிகாரி சத்ரேநாயக், கண்காணிப்பாளர் பூபதி மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்….