சேலம்: சேலம் கருப்பூர் எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள இஸ்கான் கோயில் பகுதியில் ரோந்து சென்ற போது, எதிரே ஒருவர் பைக்கில் 2 ஆடுகளை கட்டி எடுத்து வந்து கொண்டிருந்தார். போலீசாரின் வாகனத்தை பார்த்ததும், ஆடுகளை பைக்குடன் போட்டு விட்டு தப்பியோடினார்.
இதையடுத்து, போலீசார் 2 ஆடுகள் மற்றும் பைக்கை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பைக்கின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், அது திருடப்பட்ட வண்டி என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆடுகள் திருடிய நபர் மற்றும் ஆடுகளின் உரிமையாளர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட ஆடுகள் காவல்நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.