திருச்சி, ஜூன் 9: திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு முதல்வர் வருகையின்போது பெண் ஒருவர் உதவிகேட்டு அழுததை பார்த்த முதல்வர், அந்த பெண்ணிடம் விசாரிக்குமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் கவிதா. கோவையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் குடும்பத்தகராறு காரணாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படுவதாகவும், இதனால் கவிதா நேற்றிரவு திருச்சி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உதவி கேட்க வந்திருந்தார்.
அப்போது விமான நிலையத்தில் காத்திருந்த அவர் போலீசார் பாதுகாப்பு கெடுபிடிகளால் முதல்வரை நெருங்க முடிவில்லை. என்றாலும், முதல்வர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, முதல்வரை நோக்கி அழைத்தபடி கதறி அழுதார். இதைக் கவனித்த முதல்வர், மாவட்ட கலெக்டரிடம் அந்த பெண்ணிடம் விசாரிக்கும்படி கூறினார். இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்த மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், விவரங்களை கேட்டறிந்து தன்னை ஆட்சியர் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறி அனுப்பி வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.