திருச்சி, செப்.2: திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் ‘‘தலைவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்” என்னும் தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலர் முனைவர் மீனா தலைமை வகித்தார். கல்லூரி தலைமை செயல்அதிகாரி சந்திரசேகரன், மற்றும் இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கெஜலெட்சுமி மற்றும் துணைமுதல்வர் முனைவர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். பத்மபூஷன் விருதுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் முனைவர் கோபாலசுவாமி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.
ஆங்கிலத்துறை இளநிலை மூன்றாமாண்டு மாணவி எழிலரசி வரவேற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மேனியாநாட்டில் நடைபெற்ற சர்வதேச வலு தூக்கும்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு மூன்றாமிடத்தை பெற்று வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற கல்லூரியின் BCA மூன்றாம் ஆண்டு மாணவி ஜீவிதாவுக்கு சிறப்புவிருந்தினர் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைமைசெயல் அதிகாரி சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். சிறப்புவிருந்தினர் கோபாலசுவாமி ஐஏஎஸ் பேசுகையில், மாணவர்கள் பலதுறையில் உள்ள செய்திகளையும் உலகியல் சார்ந்த செய்திகளையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார். பின்னர் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கல்லூரியின் கணிதத்துறை இரண்டாமாண்டு மாணவி ஸ்ரீசௌமி நன்றி கூறினார். மாணவிகள் 3000 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.