திருச்சி, செப்.25: திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்ததுடன், கண்காணிப்பு காமிராக்களையும் உடைத்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி அந்தநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாததீர்த்த சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் அர்ச்சகர் நடராஜன் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கொண்டு, கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோயில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டு அவற்றின் ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் அகிலா, ஜீயபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சி அரியமங்கலம், கீழகல்கண்டார் கோட்டை, தாராநல்லூர் ஜெகஜோதி மாரியம்மன் கோவில் தெரு, அரியமங்கலம் அம்மாக்குளம், கம்பரசன் பேட்டை பெரியார் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இயைடுத்து 4 சிறுவர்களையும் பிடித்த போலீஸார் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.