தில்லைநகர், மார்ச் 15: திருச்சியில், திருவாரூரை சேர்ந்த விவசாய சங்க உறுப்பினர் மாயமானர். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையில் கடந்த 10ம் தேதி தேசிய நதிநீர் மற்றும் விவசாய சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. இப்பொதுக் குழுவிற்கு திருவாரூர் மன்னார்குடி பருத்திக்கொட்டை மேலத்தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் (60) மற்றும் அவரது மகன் சங்கர் (35) ஆகிய இருவரும் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.
இதனிடையே திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக சங்கர் சென்று விட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்து பார்த்தபோது தந்தை அமிர்தலிங்கம் பொதுக்குழு நடந்த இடத்தில் இல்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
எனவே இதுகுறித்து சங்கர் உறையூர் காவல் நிலையத்திற்கு சென்று, தனது தந்தை அமிர்தலிங்கத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன விவசாயி அமிர்தலிங்கத்தை தேடி வருகின்றனர்.