சத்தியமங்கலம், டிச.16: சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தமிழகத்திலிருந்து கர்நாடகா நோக்கி சென்ற ஒரு கன்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 14வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது லாரியின் பின்பகுதி சாலையில் முட்டி நகர முடியாமல் நின்றது.
இதன் காரணமாக மலைப்பாதையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்த தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மற்ற ஓட்டுநர்கள் உதவியுடன் லாரி சிறிது சிறிதாக நகர்த்தப்பட்டது. அரை மணி நேரம் கழித்து மற்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதையடுத்து போக்குவரத்து சீரானது.