சத்தியமங்கலம், அக்.2: திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து, கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு பஸ் தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.
13-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது மைசூரில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மலைப்பாதையில் எதிரே வந்த கார் ஒன்று வந்தது. இந்த கார் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதம் அடைந்தது. இதேபோல, காரின் முன் பகுதியும் சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ் மற்றும் காரில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.