Wednesday, June 12, 2024
Home » திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய விவகாரம் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய விவகாரம் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

by kannappan

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு அன்று திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக பிரமுகர் நரேஷை அரை நிர்வாணப்படுத்தி  தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 21ம் தேதி ஜெயக்குமார் கைதானார். அவரை மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு 16வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறுப்பு மாஜிஸ்திரேட் என்பதால் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்று மாஜிஸ்திரேட் கூறினார். பின்னர் நீதிமன்றத்தின் நிர்வாக மாஜிஸ்திரேட்டின் அனுமதி பெறப்பட்டு மாஜிஸ்திரேட் தயாளன் இந்த ஜாமீன் மனுவை விசாரித்தார். அப்போது, ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளி வரக்கூடிய பிரிவுகள். சம்பவம் நடத்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தால் உண்மை வெளியாகும். புகார் கொடுத்த நரேஷை மனுதாரர் ஜெயக்குமார் மிரட்டவில்லை. அவரை ஜெயக்குமார் தொடக்கூட இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.   போலீஸ் தரப்பில், உதவி குற்றவியல் வழக்கறிஞர் ஜெயகார்த்திகா ஆஜராகி, மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியுள்ளார். கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சியாகும். அதனால், தற்போது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சம்பவத்தை பதிவு செய்த வீடியோ, ஜெயக்குமாரின் ஐடியில் இருந்தே சமூக வலைத்தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், ஐடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். பாதிக்கப்பட்ட நரேஷ் சார்பில் வழக்கறிஞர்கள் துரைக்கண்ணன், ஜி.ராஜேஷ் ஆகியோர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் பொது வெளியில் புகார்தாரரை வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள். அந்த அளவில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்.    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், புகார்தாரர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று உத்தரவிட்டார்.  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாலும், கொலை முயற்சி பிரிவு (307) சேர்கப்பட்டதாலும்  ஜாமீன்கோரி ஜெயக்குமார் தரப்பு வக்கீல்கள் பாபு முருகவேல், இனியன் ஆகியோர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.இரண்டாவது வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்இதற்கிடையே 19ம் தேதி ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பொது மக்களின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததால், தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரப்புதல், தெரிந்தே பிறருக்கு தொற்றுநோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை ஜார்ஜ் டவுன் 16வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்போடு பூந்தமல்லி சிறையிலிருந்து ராயபுரம் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, அதிமுக தொண்டர்கள் சாலையை மறித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, ஜெயக்குமாரை பின் வழியாக அழைத்து சென்ற போலீசார் மாஜிஸ்திரேட் அறைக்கு செல்லும் வழியில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் மாஜிஸ்திரேட்டிடம் தனக்கு சிறையில் முதல் வகுப்பு தரவில்லை என்றார். இதையடுத்து, ஜெயக்குமாரை மார்ச் 9ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையில் அவரை புழல் சிறைக்கு மாற்றி சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi