நாகர்கோவில், பிப்.4: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி வரும் பிப்ரவரி 6 ம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்கிறார். தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இக்குழுவில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி ராஜா, வர்த்தக அணி துணை தலைவர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் , மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.எழிலன் நாகநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் வரும் 5-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகின்றனர். வரும் பிப்ரவரி 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கின்றனர். இதில் தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற உள்ளனர்.