Monday, May 13, 2024
Home » தினமும் நடுரோட்டில் பழுதாகி நிற்கும் அவலம் பிரேக் டியூப் வெடித்து தாறுமாறாக ஓடிய பிஆர்டிசி பேருந்து

தினமும் நடுரோட்டில் பழுதாகி நிற்கும் அவலம் பிரேக் டியூப் வெடித்து தாறுமாறாக ஓடிய பிஆர்டிசி பேருந்து

by Lakshmipathi

*ஓட்டுனர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தடுப்பு

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் புதுவை, காரைக்கால், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பிஆர்டிசியின் நிர்வாக கோளாறால் அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படுவது கிடையாது. பேருந்துகள் அனைத்தும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் போதிய வருமானம் இன்றி போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் தினமும் வசூல் ஆகும் பணத்தில் தங்களது படிகாசை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

தற்போது இயங்கும் 25 பேருந்துகளில் தினமும் ஒன்று பழுதாகி நடுரோட்டில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு பேருந்து நட்டு கழன்று பாதியில் நின்றது. மற்றொரு பேருந்து காலையில் பூஜை செய்து துவக்கி வைத்த 2 மணி நேரத்தில் புத்துப்பட்டு பகுதியில் இன்ஜின் கோளாறாகி நடுவழியிலேயே பழுதடைந்து நின்றது.

இந்நிலையில் காரைக்கால் பகுதியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து புதுச்சேரி வழியாக காரைக்கால் சென்ற பேருந்து நேற்று காலை 10.30 மணியளவில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே வந்தவுடன் பிரேக் டியூப் வெடித்து பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியுள்ளது. பிறகு ஓட்டுனர் தனது சாமர்த்தியத்தால் பேருந்தை கட்டுக்குள் கொண்டு வந்து புதுச்சேரி எல்லைப்பகுதியான கோரிமேட்டில் ஓரம் கட்டி நிறுத்திவிட்டு பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளார். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

பிறகு இதுதொடர்பாக ஓட்டுனர் காரைக்கால் பிஆர்டிசி அதிகாரிக்கு போன் செய்தபோது அதிகாரி போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், புதுவை பிஆர்டிசி நிர்வாகத்தின் மெக்கானிக்கை தொடர்பு கொண்டு வரவழைத்து வெடித்த டியூபை சரிசெய்து பேருந்தை பத்திரமாக காரைக்கால் பணிமனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிஆர்டிசியின் இத்தகைய நிர்வாக திறமையின்மையால் பேருந்துகள் அனைத்தும் தினமும் பழுதடைந்து பாதியில் நிற்பதால் பொதுமக்கள் புதுவை அரசு பேருந்தில் பயணிக்க அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fifteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi