திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிறுமலையில் அதிகளவு எலுமிச்சம் பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் எலுமிச்சம் பழங்கள், நாகல்நகர் பாலம் அருகேயுள்ள சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சந்தைக்கு கொடைக்கானல், பன்றிமலை பகுதிகளில் இருந்து எலுமிச்சம் பழங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு சிறுமலை பகுதியில் பருவமழை மாறி பெய்ததால் எலுமிச்சம் பழம் சீசன் மாறி உள்ளது. தற்போது சிறுமலை செட்டில் 50 கிலோ எடையுள்ள எலுமிச்சம் பழம் சிப்பம் ரூ. 1400க்கு விற்பனையாகிறது. இங்கு கிலோ கணக்கில் மட்டுமல்ல எண்ணிக்கை அடிப்படையிலும் விற்கப்படுகிறது. 3 வகையான தரங்களில் பழங்கள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முதல் தரம் ரூ.8 முதல் ரூ.10 வரைக்கும், இரண்டாவது தரம் ரூ.3 முதல் ரூ.4 வரைக்கும், மூன்றாவது தரம் ரூ.2க்கும் விற்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்கள் எலுமிச்சை பழத்திற்கு நல்ல சீசனாகும்.இதுகுறித்து கமிஷன் மண்டி உரிமையாளர் கண்ணன் கூறுகையில், ‘எலுமிச்சம் பழம் சீசன் துவங்கியதால், சிறுமலை செட்டிற்கு தினந்தோறும் 20 முதல் 30 சிப்பம் வரை விற்பனைக்கு வருகிறது. ஒரு சிப்பம் ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்கப்படுகிறது தரம் வாரியாக பிரிக்கப்பட்டு நேரடி ஏலம் மூலம் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் எலுமிச்சை மரத்தை முறையாக பராமரித்தால் வருடம் முழுவதும் பழங்கள் பறித்து விற்பனை செய்ய முடியும். ஒரு மரத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 1200 முதல் 1500 வரை எலுமிச்சம் பழங்கள் கிடைக்கும். சுமார் 14 ஆண்டுகள் வரை எலுமிச்சை மரங்கள் நல்ல பலனை கொடுக்கும்’ என்றார்….