திண்டுக்கல், மே 6: திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் டேனியல் சாமுவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இ-பாஸ் எடுத்த வர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பஸ்ஸில் வருவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல காலை 4 மணி, 5.15 மணி, 6.45 மணி மற்றும் 7.30 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து செல்ல ரூ.95ம், பஸ் ஸ்டாண்டிலுருந்து செல்ல ரூ.85ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதலால் கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.