திண்டுக்கல், மே 5: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம் நத்தம் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் சென்றது. பஸ்சை வேடசந்தூர் குரும்பபட்டியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் கண்ணா (50) ஓட்டி சென்றார். இதேபோல் நத்தத்தில் இருந்து பால் ஏற்றி கொண்டு வேன் ஒன்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த வேனை திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த செந்தில் (25) ஓட்டி வந்தார். ஆர்எம்டிசி காலனி ராதாராஜ் நகர் அருகே வந்தபோது அரசு பஸ்சும், பால் வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் அரசு பஸ் மற்றும் வேனின் முன்பக்க பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் செந்தில், கிளீனர் திருச்சி முசிறியை சேர்ந்த ராஜகோபால் (45) மற்றும் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.