தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் சுத்தமல்லி கிராமத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி தலைமையேற்று சிறப்புரை ஆற்றி பேசினார். இதில் கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்தும், இந்த பகுதிக்கு ஏற்ற கடலை விதை ரகங்கள் குறித்தும் அதன் மகசூல் பண்புகள் குறித்தும் எடுத்துக்கூறினார். விதை நேர்த்தி செய்வதால் விதை மூலம் பரவும் பூஞ்சாண நோயினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கூறினார். மேலும், ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து தீமை செய்யும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என விளக்கினார். இதில் கீரிடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் பேசுகையில் இனக்கவர்ச்சிபொறி, விளக்குபொறி மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிந்து பாதுகாப்பதன் மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்து செலவினங்களை குறைத்து குறைந்த செலவில் அதிக மகசூலை பெறலாம் என கூறினார்.முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் அசோகன் அனைவரையும் வரவேற்று வேளாண் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் நாகராஜன் உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சிதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் லெட்சுமி ,சங்கீதபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்….