தா.பழூர், செப்.27:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அர்த்தனேரி – அணைக்குடம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களை மக்கள் அள்ளிச்சென்றனர். சாலை ஓரம் கொட்டிய பூக்கள் வாசம் மிகுந்த பெரிய ரோஜா, சின்ன ரோஜா, செவ்வந்தி, மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு பயன்படுத்த கூடிய வண்ண பூக்கள் என பல வகையான பூக்களை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.இதனை சாலையில் பார்த்து செல்லும் பொதுமக்கள் மனம் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர். விஷேச நாட்களில் ரூ. 500, 1000 என விலை போகும் பூக்கள் தற்போது கேட்பாரற்று வீதியில் கிடக்கிறது.இந்த பூக்கள் சாலை ஓரம் கொட்டி கிடப்பதற்கு விலை வீழ்ச்சியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை.
இருப்பினும் கும்பகோணம்- சென்னை மார்க்கெட் செல்லக்கூடிய வாகனங்களில் இருந்து பாதியில் சாலையின் ஒரம் கொட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்கள் மணம் வீசும் நிலையில் சாலையில் செல்பவர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. விவசாயம் செய்து விளைவித்த பூக்கள் வீதியில் கிடப்பதால் விவசாயிகள் பலரும் மன குமுறலுடன் கடந்து செல்கின்றனர். சாலையில் கடந்து செல்லும் சிலர் காசு கொடுத்தாலும் ஒரு பூ கூட கூடுதலாக தர மாட்டார்கள் ஆனால் தற்போது ஒரு லாரி பூவை கொட்டி சென்றுள்ளனர் என கூறி பூக்களை அள்ளி செல்கின்றனர்.