ஈரோடு, ஜூலை 13: தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்த நிலையில், தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. சமவெளிப்பகுதிகளில் மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி இல்லாத நிலையில், மலைப்பகுதிகளில் பரவலாக மழை இருந்து வருகிறது. குறிப்பாக தாளவாடி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் தோட்டக்கலைப்பயிர்கள் மற்றும் கரும்பு, மஞ்சள், வாழை ஆகியவற்றிக்கு பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் கோடை வெயில் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய இதமான தட்ப வெப்பநிலை காய்கறி உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி தாளவாடி பகுதியில் 24 மிமீ மழை பதிவாகி உள்ளதாகவும், மேலும் வரும் நாட்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.