திட்டக்குடி, ஜூன் 22: திட்டக்குடியை அடுத்துள்ள வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன்(75). இவரது மனைவி அஞ்சலை(67). வையங்குடியில் உள்ள இவர்களது இடத்தை 15 ஆண்டுகளுக்கு முன் சிலர் அபகரித்ததாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளாக மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, தம்பதி இருவரும் நேற்று தங்கள் இடத்தை மீட்டு தர கோரி ஜமாபந்தி நடைபெற்ற தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து கையில் பதாகைகளை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பேரில் முதியோர் தம்பதி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாலுகா அலுவலகத்தில் தம்பதி தர்ணா போராட்டம்
previous post