விருதுநகர், டிச.8: விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் இறந்து விட்டால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கும் உத்தரவு நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர் பெற்று வந்த எரிபொருள் படி ரூ.2,500 நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் ராஜாமுத்துப்பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அய்யப்பன் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பிரகலாதன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் கரு. பூமிராஜன் கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் ஜெயபாண்டி, காரியாபட்டி வட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி பாண்டி, சுதந்திர செல்வி, பிச்சையம்மாள், பிரதிநிதிகள் சுந்தர மகாலிங்கம், ேசதுராமன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் முத்தையா நன்றி கூறினார்.