தாராபுரம், மார்ச் 22: தாராபுரம் அருகே குண்டடத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் கொடியசைத்து துவங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் பேருந்து நிறுத்தத்தில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடந்தது. இப்பேரணியில் மேட்டுக்கடையில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பேரணியை தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். தாராபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2, சுந்தரமூர்த்தி, குண்டடம் நில வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி, காவல் ஆய்வாளர் நாகராஜன், ருத்திராவதி பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமலதா ஆகியோர் வாக்குகளின் முக்கியத்துவத்தையும், வாக்களிப்பதன் அவசியத்தையும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினர்.
குண்டடம் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி காவல் நிலைய சாலை, கோவை சாலை குண்டடம் வாரச்சந்தை, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து ருத்ராவதி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.