அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் கிராமப் பட்டாக்களை முழுமையாக கணினியில் பதிவேற்றம் செய்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, நேற்று வழங்கினார். தமிழக அரசின் உத்தரவின்படி 13 துறைகளை ஒருங்கிணைத்து ஒற்றைச் சாளர முறையில் வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் சேகரித்து இணையவழியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவதாக செந்துறை வட்டம், அயன் தத்தனூர் கிராமத்தில் உள்ள 2799 பட்டாக்களையும் முழுமையாக 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம் , கிராம உதவியாளர் மீனா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதே போன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அயன் தத்தனூர் கிராமத்தை போல பட்டாக்களை முழுவதுமாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்தார்.நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் (செந்துறை) பாக்கியம் விக்டோரியா, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.