சென்னை: கோயில்களின் தல வரலாறு, கட்டிட கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களை பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் கோயிலின் நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் முக்கிய கோயில்களில் கோயில்களின் வரலாறு, கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிட கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் தற்போதைய நிலையில் பதாகைகள், கல்வெட்டுகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தின் கீழ் கோயில்களின் அனைத்து விவரங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இத்திட்டத்தின் ஒரு அங்கமாக கோயில்களின் தல வரலாறு, கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோயில்களில் நுழை வாயில்களில் விளக்க காட்சிகள் மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இயன்ற கோயில்களில் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மெய்நிகர் காட்சி (Virtual Reality) மூலம் கோயில் தொடர்பான விவரங்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கையை 10 நாட்களில் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….