விருதுநகர், டிச. 17: விருதுநகரில் நேரு யுவகேந்திரா, வேர்ல்டு விஷன் இந்தியா, ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் சார்பில் தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து டூவீலர் பேரணி நடைபெற்றது. ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார்.துணை ஆளுநர் ஜாகிர் உசேன் வாழ்த்தி பேசினார். பேரணியை ஏடிஎஸ்பி சோமசுந்தரம், டி.எஸ்.பி. பவித்ரா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தலைக்கவசம் உயிர் கவசம், படியில் பயணம் நொடியில் மரணம், பெண்கள் ஆபத்து எனில் எங்கேயும் எப்போதும் அவசர உதவிக்கு 181 அழைக்கவும், குழந்தைகள் சத்துக்கள் நிறைந்த உணவை பருகவேண்டும், உள்ளிட்ட பதாகைகளோடு கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தை மதுரை ரோடு, மெயின்பஜார், தெப்பம், கருமாதி மடம், புதிய பேருந்து நிலையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று சூலக்கரை காவல்நிலையத்தில் முடிவடைந்தது .முன்னதாக 10 போக்குவரத்து காவல்துறையினருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஒளிரும் மின்விளக்கு வழங்கப்பட்டது.