செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டிஇஎல்சி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜான் சைமன் மகிபாலன் தலைமை வகித்தார். பேரணியில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு, முழக்கமிட்டு, துண்டு பிரசுரங்கள் அளித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளி வளாகத்தில் துவங்கி அட்மிரல் தெரு, மீனவர் குடியிருப்பு, ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தெரு, மருத்துவமனைத் தெரு, மாணிக்கப்பங்கு சாலை, கடற்கரைசாலை, கோட்டை நுழைவாயில், ராஜவீதி, ராணி வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துக் கொண்டனர். பறைஇசை வாசித்து போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி தரங்கம்பாடியில் வெகுவாக கவர்ந்தது.