சென்னை : திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரைகே கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ தாண்டி வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தயவு செய்து முக கவசம் அணியுங்கள்.தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா ஏறுமுகம் கண்டுவருகிறது. கோவில் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியுங்கள், போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வருவோர் மாஸ்க் அணிய வேண்டும் என அரசியல் கட்சிகள் அறிவுறுத்துங்கள். மதக்கூட்டங்கள், உள் அரங்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் தான் கொரோனா வேகமாக பரவிவருகிறது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 38.7 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. இதுவரை 29.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ல் மேலும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன” என்றார் .தொடர்ந்து பேசிய அவர் , சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் .50க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம்.ஊரடங்கு தொடர்பாக தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நம்பவும் வேண்டாம். ” என்றார்….