சென்னை:சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று புராதனமான மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், தலைமைப் பொறியாளர் தட்சிணாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியர், சந்திரசேகர பட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் மூர்த்தீஸ்வரி, வசந்தி, சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, கட்டிட மற்றும் சிற்பக்கலை வல்லுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி, மதுரை மாவட்டம், கீழமாத்தூர், மணிகண்டீஸ்வரர் கோயில், திருவாரூர் மாவட்டம், சங்கரநாராயண சுவாமி கோயில், கற்பகநாதகுளம் கற்பகநாதசுவாமி கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், வரதராஜ பெருமாள் கோயில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோயில் உட்பட 58க்கு மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழ்நாட்டில் 1000 மேற்பட்ட கோயில்களில் இந்தாண்டு திருப்பணிகள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு வாரம் இரண்டு நாட்கள் மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நடத்தப்பட்டு புராதன மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரித்தல் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது….