நாகர்கோவில், ஏப்.20: நாகர்கோவில் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் ஜப்பான் தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டின் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது ரோபோ ஆசிரியர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ரோஜாவனம் கல்வி குழும கவுரவ தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜாண் ஆர்.டி சந்தோஷம் தலைமையில் சேர்மன் டாக்டர் அருள் கண்ணன், துணை சேர்மன் அருள் ஜோதி முன்னிலையில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் காமராஜினி வரவேற்றார். பள்ளி முதுநிலை முதல்வர் பினுமோன் அறிக்கை சமர்பித்தார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் அருணாச்சலம், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி சண்முககுமார், ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியின் டீன் அமெரிக்காவை சேர்ந்த எரிக் மில்லர் ஆகியோர் பேசினர். தமிழ்நாட்டின் முதல் ரோபோ ஆசிரியரை அறிமுகப்படுத்தி பேசிய இந்திய அரசின் இஸ்ரோ இயக்குனர் விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ், கல்வியில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய தலைமுறையினருக்கு நல்ல மாற்றங்களை கொண்டுவர முடியும். ரோபோ ஆசிரியர் கற்பித்தல் மற்றும் கற்றலில் புரட்சியை ஏற்படுத்தும் . மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும், மாணவர்கள் சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டும் என பேசினார்.
மாணவர்கள் இஸ்ரோ செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானி டாக்டர் ஆசீர் பாக்கியராஜ் உடன் கலந்துரையாடினர். மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் இயக்குனர் டாக்டர் சண்முக குமார் உடன் மாணவர்கள் கலந்துரையாடினர். மேலும் ரோபோ ஆசிரியர் ரோஸிடம் மாணவர்கள் கலந்துரையாடினர். பள்ளியின் தொழில் நுட்ப துறை ஆசிரியர்கள் ஜெனிரா மற்றும் ஆர்த்தி பேசினர். மாணவி ரக்ஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி கல்வி குழு இயக்குனர் சாந்தி, நிதி குழு இயக்குனர் சேது, நிர்வாக அலுவலக செயலாளர் சுஜின், ஒருங்கிணைப்பாளர் யூஜினி, மாணவர் ஆலோசகர் சுகுமாரி உட்பட ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.