வத்தலகுண்டு, பிப். 19: தமிழர்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்து வந்த வடமாநில ஓட்டல் தொழிலாளியை அதே ஓட்டலில் வேலை பார்க்கும் திருநெல்வேலியை சேர்ந்தவர் கழுத்தறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வத்தலக்குண்டு பைபாஸ் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சங்கர் (47) வேலைபார்த்து வருகிறார். அதே ஓட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சூட்டுமாஜி (30) என்பவரும் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சூட்டுமாஜி தமிழர்களை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை சங்கர் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அசாம் தொழிலாளி தமிழர்களை கேலி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றும் அவர் தமிழர்களை கடுமையாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் வெங்காயம் நறுக்கும் கத்தியை எடுத்து சூட்டுமாஜியின் கழுத்தை அறுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது கூச்சல் கேட்டு அங்கு வந்த சக ஊழியர்கள் சூட்டுமாஜியை மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அசாம் தொழிலாளியை சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.