ஊட்டி, ஏப். 26: நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா உள்ளிட்ட ஏராளமான பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இதில், தமிழகம் மாளிகை பூங்காவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லாவிட்டாலும், அதிகளவிலான விஐபிக்கள் இங்கு செல்வது வழக்கம். இதனால், இப்பூங்கா முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோடை சீசனின் போது இப்பூங்காவிலும் பல ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா பராமரிக்கப்படும். அதேபோல், அங்குள்ள புல் மைதானங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படும். இந்நிலையில், கோடை சீசனுக்காக இப்பூங்காவும் கடந்த 3 மாதங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பூங்காவில் உள்ள புல் மைதானங்களுக்கு நாள் தோறும் தண்ணீர் தெளிக்கும் பணிகள் மற்றும் சமன் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.