புதுடெல்லி: விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் முதலாவதாக தமிழகம், கேரளா, புதுவை ஆகியவை குறித்து விரிவான ஆலோசனையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. இதைத்தொடர்ந்து நாளை அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளது.தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே தமிழகம் உட்பட விரைவில் தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி முடித்துள்ளனர்.இதையடுத்து விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் துவக்கப்பட்டது. இதில் முதலாவதாக சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனையில், தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில்,’நாடு முழுவதும் கொரோனா பரவல் முமுமையாக விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது, மேலும் எந்த மாந்லங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது, வாக்களிக்கும் பூத் அமைப்புகளின் வரையறைகள் என்னென்ன, பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை, அதற்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை, தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மேலும் அவர்களுக்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை இன்காலை அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டதால், இதையடுத்து விரைவில் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் அறிவிக்கும் என தெரியவருகிறது….
தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இறுதி செய்தது தலைமை தேர்தல் ஆணையம் : விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
previous post