* பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதி * முன்னாள் ராணுவ வீரருக்கு குவியும் பாராட்டுகண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அருகே தமிழகத்திலேயே முதன்முறையாக விவசாய பண்ணை குளத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி வடிவமைத்த முன்னாள் ராணுவ வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அத்தியூரை சேர்ந்தவர் தங்கராஜ்(58), முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி துணை தலைவராக இருந்தவர். தற்போது மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி(50), ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, உலகிலேயே முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை கொண்டு, மாவட்டம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 30 நாட்களில் 1,121 பண்ணைக்குளங்கள் அமைக்கப்பட்டது. இதற்காக எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் உலக சாதனைக்கான விருதையும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வழங்கியது. இதையடுத்து பண்ணைக்குளங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இதேபோல் முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் விவசாய நிலத்தில் அமைத்திருந்த குளம் அவருக்கு வழங்கப்பட்டது. அக்குளத்தை விவசாயத்திற்கும், மீன் வளர்ப்பதற்கும் மட்டுமின்றி கிராமமக்கள் பொழுதுபோக்கு பூங்காவாகவும், நீச்சல் குளமாகவும் பயன்படுத்தும் வகையில் மாற்றியுள்ளார். இதற்காக குளத்தின் நடுவே நீர்வீழ்ச்சி, குளத்தின் நடுவிலிருந்து குளக்கரைகள் முழுவதும் வண்ணமயமான மின்விளக்கு அலங்காரம், குளக்கரையில் ஊஞ்சல், குளத்தில் பாதுகாப்பு டியூப்புகளுடன் நீச்சல் பயிற்சி, கரை முழுவதும் அழகிய ரோஜா செடிகள், பப்பாளி செடிகள் என பல லட்ச ரூபாய் மதிப்பில் தன் சொந்த செலவில் உருவாக்கி பொதுமக்களும், இளைஞர்களும் முற்றிலும் இலவசமாக பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளார். மலையடிவாரத்தில் பசுமையான இயற்கை சூழலுடன் இந்த குளம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த குளம் வெட்டும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் பரிசுகள் வழங்கி, நன்றி தெரிவித்தார்.அப்போது முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் கூறுகையில், ‘ முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விவசாயிகளின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். அவர்களுக்கும், இந்த உலக சாதனை நிகழ காராணமாயிருந்த கலெக்டர் முருகேஷூக்கும் இந்த பண்ணை குளத்தை தமிழகத்திற்கே முன்மாதிரி குளமாக மாற்றி சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்றார். இக்குளம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் பழகுவதற்கும், நகரங்களை விட சிறந்த பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பதாகவும் கிராமமக்கள் தங்கராஜீக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தங்கராஜ் ஏற்கெனவே இதேபோல் ஊர்குளத்தை பொழுதுபோக்கு பூங்கவாக மாற்றி, குளக்கரையில் இளைஞர்கள் ராணுவ பயிற்சி பெற கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை இலவசமாக செய்தது குறிப்பிடத்தக்கது….