புதுச்சேரி, செப். 16: மக்கள் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதை தடை செய்வதற்கும் தயங்க மாட்டோம் என கவர்னர் தமிழிசை கூறினார். புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதரா நிலையத்தில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் கண்டறியும் முகாம் நேற்று நடந்தது. இம்முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்து கூறுகையில், இந்தியாவில் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது. மாகே பிராந்தியத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயில், பேருந்து மூலம் வருபவர்களை பரிசோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தது அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல், அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.தனியார் மருத்துவமனைகளுக்கு நேரம் செலவிடும் அரசு மருத்துவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதை தடை செய்வதற்கும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் உரிமை தொகை: கவர்னர் மகிழ்ச்சி
கவர்னர் தமிழிசை மேலும் கூறும்போது, தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு என்ன உரிமை கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி.