பெரம்பலூர்,ஜூலை4:தனியார் நிதிநிறுவனத்திடம் இருந்து கட்டிய பணத்தை திரும்பப் பெற்றுத் தரக்கோ ரி அரும்பாவூர், தழுதாழை, பூலாம்பாடி பகுதி மக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர், தழுதாழை, அ.மேட்டூர், பூலாம்பாடி பகுதி மக்கள் அளித்துள்ள புகார் மனு வில் தெரிவித்திருப்பதாவது :
நாங்கள் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தகுமார் என்பவர் மூலமாக கடந்த 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலும் கட்டிய பணத்தை மக்களுக்கு வாங்கிக் கொடுத்தோம்.ஆனால் 2015ம் வருடத்திற்கு பிறகு அந்நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை.இந்த நிறுவனத்தில் இணைத்தவர்கள் மூலம் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
எந்தத் தகவலும் இவர்கள் எங்களுக்கு தருவதில்லை. பின்னர் பணம் கட்டிய மக்கள் பணத்தை திரும்பக்கேட்டு எங்களைத் தொந்தரவு செய்கிறார்கள்.இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறோம். எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து நாங்கள் கட்டிய பணம் எங்களுக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனஅந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.