நல்லம்பள்ளி: அதியமான் கோட்டை அருகே தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரிகள் நேற்று பொதுமக்களுடன் சென்று ஆய்வு நடத்தினர். அதியமான்கோட்டை அடுத்த பிர்லா நகர் பகுதியில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதியதாக தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செயல்பட்டு வருகிறது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்ததால், தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என, நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.