சேலம், ஆக.30: சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(23). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து சற்று தூரத்தில் வசிப்பவர் பாலு(எ) பாலகிருஷ்ணன்(35). இவர் ரஞ்சித்குமாரின் மனைவியை பார்த்து சைகை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ரஞ்சித்குமார், பாலுவிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.அப்போது வீட்டிற்குள் சென்ற பாலு, கத்தியை எடுத்து வந்து ரஞ்சித்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் லேசான காயத்துடன் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து காயம் பட்ட ரஞ்சித்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 3 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
சேலம், ஆக.30: சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்ந்தவர் மகாதேவன்(24). இவர் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிதா(23). இவர்களுக்கு இரண்டரை வயதில் அனு, 8 மாதத்தில் ஷர்மி ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 16ம் தேதி வீட்டில் இருந்த நிதா, இரண்டு குழந்தைகளுடன் திடீரென மாயமானார். அவர்களை மகாதேவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி கிச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மும்பையை சேர்ந்த நிதா, மகாதேவனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனிடையே மகாதேவனின் வீட்டின் அருகேயுள்ள வாலிபர் ஒருவரும் மாயமாகியுள்ளார். இதனால் அவருடன் நிதா மும்பைக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டாரா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.