ஒரத்தநாடு :பொதுவாக நெடுஞ்சாலைகளில் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு தான் எத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என பெயர் பலகை வைத்து இருப்பார்கள். ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ஒருவர் உலகில் உள்ள நாடுகளின் தொலைதூரத்தை காட்டும் திசைகாட்டி பலகையை வைத்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தஞ்சை மாவட்டம் தஞ்சை – பட்டுக்கோட்டை சாலை தெலுங்கன்குடிகாட்டில் பெட்ரோல் பங்க், தேனீர் நிலையம் நடத்தி வருபவர் மாமல்லன். சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு தனது சொந்த ஊரில் தொழில் செய்து வரும் இவர் பொதுமக்கள் ஒன்று கூட கூடிய இந்தப் பகுதியை மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு இருக்கைகள் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கடையில் வைத்திருக்கும் இவர் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் அனைவரும் இங்கு இருக்கும் சிறிய நேரத்தை கூட பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக உலகில் உள்ள முக்கிய நாடுகள் எந்தெந்த பகுதிகளில் இருக்கின்றன. இங்கிருந்து எத்தனை கிலோமீட்டர் எத்தனை மைல் தொலைவில் அந்த நாடு உள்ளது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் திசை அறிந்து வைத்துள்ளார். மேலும் இவர் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான், தாய்லாந்து, சவுதிஅரேபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா இங்கிலாந்து, உள்ளிட்ட 28 நாடுகள் உடைய பெயருடன் கூடிய பலகையை இங்கு வைத்துள்ளார்.எதற்காக இந்த பலகை வைத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். வேலைபார்ப்பவர்கள் அந்த நாடு எங்கு உள்ளது என்பது அவருக்குத் தெரியாது. கிழக்கே உள்ள நாட்டிற்கு நேர்திசை காட்டுவார்கள்.தங்கள் மகன் தங்களது கணவர் தங்களது பிள்ளை சிங்கப்பூரில் வேலை பார்க்கிறது. துபாயில் வேலை பார்க்கிறது எனக்கூறும் இவர்கள் அந்த திசை மாறி கூறுவார்கள். அவர்கள் இங்கு வந்தால் தங்கள் மகன் எந்த திசையில் வேலை பார்க்கிறார். எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பலகையை வைத்துள்ளதாகவும் மேலும் பலருக்கும் எந்த நாடு எந்த திசையில் உள்ளது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது தெரியாமலேயே உள்ளது. அவர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பலகையை வைத்து உள்ளேன் என்றார்….