தஞ்சாவூர், ஏப்.21: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் ஊராட்சி சோழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் குறித்தும், சோழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோகத் திட்ட அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், பட்டீஸ்வரம் ஊராட்சி மாருதி நகர் மற்றும் துரை ரெத்தினம் பிள்ளை நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி குறித்தும், பட்டீஸ்வரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருவது குறித்தும், பட்டீஸ்வரம் ஊராட்சியில் உள்ள காயத்ரி குளம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூர் வாரும் பணி மேற்கொள்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியநாராயணன், பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.