தஞ்சாவூர், ஜூலை 15: தஞ்சாவூர் புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு நல்ல பயனுள்ள புத்தகங்களை வழங்கலாம் என்று சிறைத்துறை தெரிவித்து உள்ளது. தமிழக முதல்வரால் இந்த வருடம் ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னையில் சிறைவாசிகளுக்கு கூண்டுக்குள் வானம் என்ற புத்தகங்களை சிறைவாசிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த பள்ளிகளுக்கு புத்தகங்களை பொதுமக்கள் அனைவரும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது மட்டுமின்றி, முக்கியமாக கூண்டுக்குள் வானம் என்ற புத்தகத்தை சிறைவாசிகளுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் சிறைவாசிகள் சிறையில் இருக்கும் பொழுது மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க அவர்களுக்கான பொழுதுபோக்கும் விஷயமாக அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு நம்மால் முடிந்த உதவியை பொதுமக்கள் புத்தகங்களை வழங்கி அந்த புத்தகத்தின் வாயிலாக சிறைவாசிகள் ஒருவர் மனம் திருந்தி வந்தாலும் அதனுடைய புண்ணியம் உங்களது குடும்பத்தாரை சேரும் என்று பேசினார். அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நேற்று தொடங்கி 24ம்தேதி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சி திருவிழாவில் சிறைவாசிகளுக்கென்று புத்தகங்கள் வாங்கப்படும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பகுதியில் உள்ள பொதுமக்களும், தன்னார்வலர்களும் புத்தகங்கள் வழங்கி தங்களுக்குரிய ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த பத்து நாள் புத்தக கண்காட்சி திருவிழாவில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் சிறைவாசிகளுக்கு நல்ல கருத்துள்ள ஆன்மீக புத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் கதை புத்தகங்கள் போன்றவை வழங்கலாம். தஞ்சாவூர் பகுதியில் உள்ள சிறைச்சாலைகள், தஞ்சாவூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் போன்ற இடங்களில் சிறைச்சாலைகள் உள்ளன. அச்சிறைச்சாலைகளில் குறைந்தது 100 நபர்கள் சிறைவாசிகளாக உள்ளனர். இந்த ஐந்து இடங்களையும் சேர்த்து சிறைவாசிகள் குறைந்தது 500 நபர்கள் உள்ளனர். மேலும் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று நினைத்தால் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் சந்தனம் மற்றும் உதவி கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புத்தகங்கள் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என பொதுமக்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.